சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, புதுச்சேரி, கேரளா, அசாமில் கடந்த ஏப்.9-ம் தேதியும், தமிழகத்தில் கடந்த ஏப்.23-ம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 ஆகிய தேதிகளி்ல் 2 கட்டமாக நடைபெற்றது. அங்கு 2-ம் கட்ட தேர்தலில் முறைகேடு புகார்கள் எழுந்ததால், 15 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டதுஇதேபோல, கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்.9, 23 ஆகிய தேதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை, மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர். இதன்மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு நடந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது.கடந்த 23-ம் தேதி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு, தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 62 மையங்களில் பாதுகாப்பு அறைகளில் (‘ஸ்டிராங் ரூம்’) வைக்கப்பட்டுள்ளன. இங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக 5 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று இணைய வழியில் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கினார். ‘‘தமிழகத்தில் 62 மையங்களில் 65 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 18 ஆயிரம் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநிலம் முழுவதும் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொகுதிக்கு ஒரு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் என 234 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்று அவர் தெரிவித்தார்.
Fans
Fans
Fans
Fans
Fans